Tamil eBook Library
Library entries contain information about the series, library and collection of documents to which the book belongs.!

புதுமைப்பித்தன் உதிர்த்த முத்துக்கள்
முல்லை முத்தையா


 



புதுமைப்பித்தன்

உதிர்த்த முத்துக்கள்

தொகுத்தவர் :

முல்லை பிஎல். முத்தையா

முல்லை பதிப்பகம்

323/10, கதிரவன் காலனி,

அண்ணா நகர் மேற்கு,

சென்னை - 600 040

நூல் விளக்கக் குறிப்புகள்

நூலின் பெயர் : புதுமைப்பித்தன் உதிர்த்த முத்துக்கள்

தொகுத்தவர் : முல்லை பிஎல். முத்தையா

மொழி : தமிழ்

வெளியீட்டு நாள் : அக்டோபர் - 1998

பதிப்புரிமை : ஆசிரியருக்கு

தாள் : 10.5 கி.கி. வெள்ளைத்தாள்

நூலின் அளவு : 18.5 செ.மீ. x 12.5 செ.மீ.

எழுத்து : 12 புள்ளி

பக்கங்கள் : 64

வெளியிடுவோர் : முல்லை பதிப்பகம்

323/10, கதிரவன் காலணி

அண்ணா நகர் மேற்கு,

சென்னை-40

நூல் கட்டு : தாள் அட்டை

பொருள் : துணுக்கு இலக்கியம்

அச்சிட்டோர் : ஶ்ரீ வெங்கடேஸ்வரா அச்சகம்

7/40, கிழக்கு செட்டித் தெரு,

பரங்கிமலை, சென்னை-16

* * *

விலை : ரூ. 12-00

உள்ளடக்கம்

‘அழகின் சிரிப்பு’ நூலுக்கு புதுமைப்பித்தன் எழுதிய மதிப்புரை

வேடிக்கை மனிதர்

புதுமைப்பித்தன் வாழ்க்கைக் குறிப்பு

சுவைமிகுந்த பேச்சுக்கள்

புதுமைப்பித்தன் எழுதிய கதை கட்டுரைகளில் மூழ்கி எடுத்த முத்துக்கள்...

புதுமைப்பித்தன் எழுதிய கடிதம்

‘அழகின் சிரிப்பு’ நூலுக்கு புதுமைப்பித்தன் எழுதிய மதிப்புரை

* * *

‘ஆயிரம் உண்டிங்கு ஜாதி- எனில் அந்நியர் வந்துபுகல் என்ன நீதி’ என்று அதட்டிக் கேட்ட குரல் ஒடுங்கி சுமார் இருபது வருடங்கள் கழித்த பிறகு, பாரதீய பரம்பரை ஒன்று இருப்பதாகத் தெரிவித்துக் கொள்ளப்பட்டது. பாரதீய பரம்பரை என்று காவியத்துறையில் இருப்பதை ஒப்புக் கொள்வது. அவசியமாயின், அதன் ஏகப்பிரதிநிதி பாரதிதாசனே என்பதற்கு முல்லைப் பதிப்பக வெளியீடான ‘அழகின் சிரிப்பு’ ஓர் அத்தாட்சி.

ஆற்றொழுக்குப் போன்ற நடை, சிற்றோடையின் ஆழமும், வேகமும், தெளிவும் பெற்ற கற்பனை. யாரையும் சட்டை செய்யா, எவருக்கும் பணியாத கருத்தமைதி-இவைதான் பாரதிதாசன்.

திருவிளக்கிற் சிரிக்கின்றாள்

நா ரெடுத்து

நறுமலரைத் தொடுப்பவளின்

விரல் வளைவில்

நாடகத்தைச் செய்கின்றாள்;

அடடே, செந்தோள்

புறத்தினிலே கலப் பையுடன்

உழவன் செல்லும்

புது நடையில் பூரிக்கின்றாள்.

என வர்ணிக்கப்படும் அழகுத் தெய்வத்தின் பாதாதி கேசம் இப்பாடல் தொகுதி என்று சொன்னால் முழுதும் பொருந்தும்...

இந்தத் தொகுதியில் ‘தாசன்’ ஒரு புதிய சம்பிரதாயத்தைப் புகுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. பொதுவாக இதுவரை பாடல்களில், பெண்கள் அல்லது அரசர்கள் ஆகியோருக்கே உலகின் அழகுச் சுமைகளையெல்லாம் காணிக்கையாக வைத்து வழுத்துவது மரபு. இங்கு இவர் தம் கற்றுச் சொல்லியிடம் உலகின் அழகுகளை எடுத்துக்காட்டி வருவது போலவே பாடல்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதுவரை இல்லாத புது சம்பிரதாயம் இது.

‘தினசரி’ இதழ்

வேடிக்கை மனிதர்

* * *

‘கலைமகள்’ அதிபர் திரு. நாராயணசாமி ஐயர் அவர்கள் தமிழ்த் தாத்தா உ. வே. சாமிநாதையர் அவர்களுக்கு அடுத்தபடியாக புதுமைப்பித்தனை மதித்தார்! அலுவலகத்தில் புதுமைப்பித்தனிடம் சிலருக்கு வெறுப்பு இருந்தபோதிலும் அதை அவர் பொருட்படுத்தவில்லை.

புதுமைப்பித்தன் எழுதிய “கடவுளும் கந்தசாமி பிள்ளையும் என்ற கதை ‘கலைமகளில்’ வெளிவந்த சமயம் தி. ஜ. ர அவர்கள் படித்து ரசித்துவிட்டு, அடுத்த பகுதி எப்போது வரும்” என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது தி. ஜ. ர. ‘சக்தி’ ஆசிரியராக இருந்தார். என்னை வழியில் பார்த்து அடுத்த பகுதி வருவதற்கு ஒரு மாதம் காத்திருக்க வேண்டுமே என்று வருத்தப்பட்டார். அப்போதுதான் புதுமைப்பித்தனை அறிந்தேன்.

அடுத்த சில நாட்களில் புதுமைப்பித்தனே 'முல்லை' பதிப்பகத்துக்கு வந்துவிட்டார்! அவருடைய வருகையே உற்சாகமாக இருக்கும். வரும்போது சிரித்துக்கொண்டே வேலை எல்லாம் தடைப்பட்டுவிட்டதோ? என்று கூறுவார். இதுவே முதல் அறிமுகம். பிறகு அடிக்கடி சிரிப்பொலியுடன் வருவார்.

அப்போது 'வேலன், வேடன், விருத்தன் என்று என்னைக் குறிப்பிடுவோர், அதாவது பிரிண்டர், பப்ளிஷர் ஆசிரியர் என்பதை அப்படி நகைச்சுவையோடு குறிப்பிடுவார். இப்படியாக தொடர்ந்தது எங்களது தொடர்பு.

அவர், பல சமயங்களில் பணம் கேட்கும்போது தயங்காமல் கொடுத்து இருக்கிறேன். அதற்கு அவராகவே சில கதைகளை உரிமை எழுதி நீங்கள் அச்சிட்டு வெளியிட்டுக் கொள்ளுங்கள் என்றார்.

மேற்படி கதைகளை ‘விபரீத ஆசை’ என்ற பெயரில் வெளியிட்டேன்.

வேடிக்கை மனிதர் புதுமைப்பித்தனோடு உரையாடும் போது கூறிய சுவையான முத்துக்களை இந்நூலில் தொகுத்து வழங்கியுள்ளேன்.

323/10, கதிரவன் காலனி

அண்ணா நகர், மேற்கு

சென்னை- 600 040 முல்லை பிஎல் முத்தையா

புதுமைப்பித்தன் வாழ்க்கைக் குறிப்பு

* * *

தென்னாற்காடு மாவட்டத்தில் நிலப்பதிவு தாசில்தாராக இருந்த திரு. சொக்கலிங்கம் பிள்ளைக்கு, 1906-ம் வருஷம் ஏப்ரல் மாதம் திருமகனாக புதுமைப்பித்தன் திருப்பாதிரிப்புலியூரில் பிறந்தார்.

புதுமைப்பித்தனின் பூர்வீகம் திருநெல்வேலி ஜில்லா.

புதுமைப் பித்தனுக்கு பெற்றோர் இட்ட பெயர் விருத்தாசலம்.

புதுமைப்பித்தன் கல்லூரியில் படித்து பி. ஏ. பட்டம் பெற்றவர்.

தன் தகப்பனாரைப்போல் அரசாங்க உத்தியோகத்தில் ஈடுபட ஆசைகொள்ளாமல் எழுத்தாளராகிவிட்டார்.

1931-ம் வருஷம் திருவனந்தபுரம் திரு. பி.டி. சுப்பிரமணிய பிள்ளையின் குமாரத்தியைப் புதுமைப்பித்தனுக்கு மனம் செய்வித்தனர்.

புதுமைப்பித்தன் ‘மணிக்கொடி’ பத்திரிகைக்கு கதைகள் அனுப்பி, அதன் மூலம் பேராசிரியர் வ. ரா. வின் தொடர்பு கொண்டு, சென்னைக்கு வந்து மறுமலர்ச்சி எழுத்தாளர் குழுவில் ஐக்கியமானார்.

ராய. சொ. நடத்தி வந்த ‘ஊழியனி’ல் சிறிது காலம் உதவி ஆசிரியராக இருந்தார். பின்னர் ‘தினமணி’யில் உதவி ஆசிரியர்; அதன் பிறகு ‘தினசரி’யில் உதவி ஆசிரியராக இருந்து ராஜினாமாச் செய்து வெளியேறினார்.

ஒரே மகள் மட்டும் அவருக்கு உண்டு. பெயர்; ‘தினகரி.’

சொ. வி. என்ற பெயரில் அரசியல் கட்டுரைகளையும், ‘புதுமைப்பித்தன்’ என்ற பெயரில் சிறு கதைகளையும், ‘ரசமட்டம்’ என்ற பெயரில் விமரிசனக் கட்டுரைகளையும், ‘வேளூர். வே. கந்த சாமிக் கவிராயர்’ என்ற பெயரில் கவிதைகளையும் எழுதி வந்தார்.

காமவல்லி, ராஜமுக்தி, அவ்வை ஆகிய திரைப்படங்களுக்கு வசனம் எழுதினார்.

1948-ம் வருடம் ஜூன் மாதம் 30-ம் தேதி புதுமைப்பித்தன் தமிழையும்-தமிழ் நாட்டையும் விட்டுப் பிரிந்தார்.

சுவைமிகுந்த பேச்சுக்கள்

புதுமைப்பித்தனோடு சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தோமானால் சர்வ சாதாரணமாக சில ‘நகைச்சுவை வெடிகளை’ உபயோகிப்பார். ‘முல்லைப் பதிப்பக’த்துக்கு அடிக்கடி வருவார்; மணிக்கணக்காகப் பேசிக் கொண்டிருப்பார், நான் மற்ற வேலைகளை அப்படி அப்படியே விட்டு அவரோடு பேசி, அவர் உதிர்க்கும் மணிமொழிகளை ரசிப்பதில் ரொம்ப மகிழ்ச்சி அடைவேன். காபி குடிப்பது வெற்றிலை சீவல் போடுவதைப் போல் சுவையான பேச்சும் அவருக்குச் சர்வ சாதாரணமானது. நமக்கு அது ரொம்பவும் ரசிக்கக் கூடியதாகும். சொல்லிச் சொல்லி வியந்து மகிழ்கிறோம். அவருடைய பேச்சுக்களிலிருந்து அவற்றைத் தொகுத்திருந்தால் அதுவே ஒரு தனிப் புத்தகமாக ஆகிவிடும்.

அவர் கூறிய இந்த விஷயங்களைத் தனி ஒருவர் காதில் மட்டும் ஓதிச் சொல்லவில்லை. பல சந்தர்ப்பங்களில், பலரின் மத்தியில் ‘நகைச்சுவை மணி’களை உதிர்த்திருக்கிறார், இதில் உள்ளவை சிலருக்குத் தெரிந்தவையாகவும், பலருக்குத் தெரியாதவையாகவும் இருக்கும். இன்னும் சில எழுத முடியாத நகைச்சுவைகளாகவும் இருக்கின்றன. புதுமைப்பித்தன் முன்னிலையில் யாருடைய பேச்சும் எடுக்காது. ஏதாவது ஒன்று படீரென்று, பேராசிரியர் வ. ரா. சொன்னது போல் ‘பாசு பதாஸ்திர’மாகவே விளங்கும். இந்த விஷயங்களை நாம் ரசிக்கும் போது பேரறிஞர் பெர்னாட்ஷாவின் நினைவு வந்தே தீரும்.

தர்மம் தான் வெற்றி பெறுகிறதா?

நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை “அவளும் அவனும்” எனும் கவிதை காவியம் எழுதியிருந்தார், அதைப் பார்த்த நான் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனிடம் அதைப் போல் ஒரு காவியம் எழுதுமாறு கேட்டுக் கொண்டேன்.

கவிஞர் “பாண்டியன் பரிசு” என்ற காவிய நூலை எழுதினார். அது அச்சிட்டு வெளிவந்தது. அந்த நூலின் முதற் பக்கத்தில் “பாண்டியன் பரிசு” முகப்பு அட்டைப் படத்தையும் பின்புறத்தில் பாண்டியன் பரிசு பற்றிய விவரமும் எழுத நினைத்திருந்தேன். அப்போது புதுமைப்பித்தன் அவர்கள் முல்லைப் பதிப்பகத்துககு வந்தார். மேற்படி விவரத்தைச் சொல்லி, பாண்டியன் பரிசு நூலை அவர் கையில் கொடுத்து சிறு விளக்கம் எழுதித் தருமாறு கேட்டுக் கொண்டேன். 1946-ல் நடந்தது. மேற்படி குறிப்பு கிடைக்கவில்லை.

அதன் கருத்து :

பாரதிதாசனுக்கும் ஏனைய கவிஞர்களைப் போல முடிவில் தர்மம் தான் வெற்றி பெறுகிறது. உலகில் தர்மா தர்ம பிரச்சனைகளில் அப்படித்தானா? என்று அந்தக் குறிப்பில் கேட்டிருந்தார், புதுமைப்பித்தன் எழுதிய குறிப்பை பாரதிதாசனிடம் காண்பித்தேன்.

அவர் “அதில் என்ன மாற்றம் நல்லது செய்தவன் நன்றாக இருப்பான்” என்றார்.

இதைப் புதுமைப்பித்தனிடம் சொன்னேன் “அப்புறம் என்ன புரட்சிக் கவிஞர்” என்று சொல்லி சிரித்தார்.

அசலும் போலியும்

புதுமைப் பித்தனுக்கு பெரும்பாலும் அசல்தான் பிடிக்குமே தவிர போலி பிடிக்காது, ஒரு சமயம் தேசிய முஸ்லீம், வெஜிடபிள் பிரியாணி, ஆங்கிலோ இண்டியன் இதை சொல்லிவிட்டு இதெல்லாம் என்ன வேடிக்கை என்று சிரித்தார்.

தனித்தன்மை

க. நா. சு. “சூறாவளி” என்ற பத்திரிகையை நடத்திக் கொண்டிருந்தார். அதன் அலுவலகம் பிராட்வேயில் இருந்தது. மாதம் ஒருமுறை கூட்டம் நடைபெறும் பிரதமவிருந்தினராக ஒருவர் பேசுவார். ஒருமுறை கூட்டத்துக்கு ரசிகமணி டி. கே. சி. வந்திருந்தார். அப்போது சற்று தூரத்தில் மஞ்சரி ஆசிரியர் தி. ஜ. ர., புதுமைப் பித்தன், நான் மூன்று பேரும் நின்று பேசிக் கொண்டிருந்தோம் அந்த இடத்திற்கு ரசிகமணி வந்து “என்ன விருத்தாச்சலம் செளக்கியமா” என்ற கேட்டார்.

மற்றவர்களானால் பிரமுகர்களைத் தேடிப் போவார்கள். புதுமைப்பித்தன் அப்படியெல்லாம் போகவில்லை. அவருடைய தனித்தன்மையை நான் அப்போது உணர்ந்தேன்.

நாதஸ்வரம் வாசிக்கக்கூடாதா?

புதுமைப்பித்தன் ராயப்பேட்டை நெடுஞ் சாலையில் ஒரு வீட்டில் வாழ்ந்து வந்தார். அவர் வீட்டில் ஒரு சமயம் தவில் நாதஸ்வரம் முதலானவை இருந்தன. அதைப் பார்த்துவிட்டு இவை என்ன என்று கேட்டபோது நாதஸ்வரம் வாசிக்கக் பழகிக் கொள்கிறேன் என்று கூறி, ராஜரத்தினம் பிள்ளை கட்டுரை எழுதும் போது நான் ஏன் நாதஸ்வரம் வாசிக்கக்கூடாது என்று கேட்டு விட்டுச் சிரித்தார்.

ஓட்டல் சாப்பாடு

புதுமைப்பித்தனும் அவர் மனைவியும் பெரும்பாலும் ஓட்டலில்தான் சாப்பிடுவார்கள்.

“நெருப்பைத் தருவேன்”

ஏ. கே. செட்டியார் ‘குமரி மலர்’ பத்திரிகை நடத்திக் கொண்டிருந்தார்.

ஒரு சமயம் புதுமைப்பித்தனிடம் கட்டுரை எழுதித் தருமாறு கேட்டார்.

அதற்கு, புதுமைப்பித்தன் ‘நான் நெருப்பை அல்லவா அள்ளித் தருவேன்’ என்றார்.

‘சரி கொடுங்கள் நான் வாங்கிக் கொள்கிறேன்’ என்றார் ஏ. கே. செட்டியார்.

‘கை சுட்டு விடும்’ உங்களால் தாங்கிக் கொள்ள முடியாது என்றார் புதுமைப்பித்தன்.

‘கலைமகள்’ தவிர வேறு எந்தப் பத்திரிகைக்கும் அவர் எழுதியதில்லை.

எப்போது போவாய்?

புதுமைப்பித்தனின் தந்தை விருத்தாச்சலத்தில் அரசு உத்தியோகத்தில் இருந்தார். அப்போது புதுமைப்பித்தன் வீட்டிற்கு உறவினர்கள் வந்தால் அவருடைய தந்தையார் அவர்களை வாவா என்று வரவேற்று எப்போது திரும்ப போகப் போகிறாய் என்று கேட்பாராம் (உறவினர் முகம் சுளிப்பர்) அதாவது உடனே சென்று விடாமல் இரண்டு மூன்று நாள் தங்கி விட்டுப் போக வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் தான் கூறுவாராம்.

இயற்பெயர்

புதுமைப்பித்தனின் தந்தையார் விருத்தாச்சலத்தில் அரசு உத்தியோகத்தில் இருந்தார். அப்போது புதுமைப்பித்தன் பிறந்தார். அதனால் அவருக்கு விருத்தாச்சலம் என்று பெயர் சூட்டினார் (புதுமைப் பித்தனின் இயற்பெயர் விருத்தாச்சலம்)

எறும்பு சிவம்

ராய.சொ. நடத்திய ‘ஊழியன்’ பத்திரிகையில் புதுமைப்பித்தனை ஒரு உதவியாசிரியராக அமர்த்தி வைத்தார் பேராசிரியர் வ.ரா ஈ சிவம் என்பவரும் உதவியாசிரியராக இருந்தார். சிறிது காலம் வேலை பார்த்தபின் புதுமைப்பித்தன் ஊழியனிலிருந்து வெளியேறி விட்டார். அப்போது புதுமைப்பித்தனைச் சந்தித்த வ.ரா., ஈசிவம் எப்படியிருக்கிறார்” என்று கேட்டார். அவர் ஈசிவமாயிருந்தால் தேவலை. எறும்பு சிவமாயிருந்து என்னைப் பிடுங்கி விட்டார்.” என்றார் புதுமைப் பித்தன்.

நந்தன் சிதம்பரத்துக்கு...

புதுமைப்பித்தன் அடிக்கடி தம் சொந்த ஊருக்குப் போவது வழக்கம், நாள் ஒன்று குறிப்பிட்டு விடுவார். அந்த நாளில் போக செளகரியப்படாமல் ஏதாவது தடை ஏற்பட்டுவிடும். “ஊருக்குப் போவதாகக் சொன்னீர்களே ஏன் போகவில்லை” என்று யாரேனும் கேட்டால் “நந்தன் சிதம்பரத்துக்குப் போன மாதிரிதான் நான் ஊருக்குப் போவது” என்பார் புதுமைப்பித்தன்.

முன்பாரா பின்பாரா

புதுமைப்பித்தனுடன் தோழர் ரகுநாதனும் நானும் (முல்லை முத்தையா) ஒரு சமயம் காலையில் ஒய். எம். ஐ. ஏ. க்குச் சென்றோம்; சர்வரைப் பார்த்து, இட்லி கொண்டு வரும்படி சொன்னார் புதுமைப்பித்தன். சிறிது நேரம் ஆகும் என்றார் சர்வர். “அப்போது முதலில் காபி கொடு, பிறகு இட்லி கொண்டு வா, அப்புறம் ஒரு காபி, முன்பாரா பின்பாராவுடன் இட்லி உள்ளே செல்லட்டும்” என்றார் புதுமைப்பித்தன்.

குட்டு வெளிப்பட்டது!

ஒரு தமிழ் எழுத்தாளர் எழுதிய கதையை, மற்றொருவர் பாட்டாக எழுதி ஒரு பத்திரிகையில் வெளியிட்டு விட்டார். ‘என்னுடைய கதையைப் பாட்டாக்கித் தம் சொந்தப் பாட்டுப் போல் வெளியிட்டிருக்கிறார். என்று கதையை எழுதிய எழுத்தாளர் கோபப்பட்டாராம். இந்த விஷயம் புதுமைப் பித்தனுக்குச் சொல்லப்பட்டது. அவர் உடனே சொன்னார்: “அந்தக் கதையே காப்பிதான். கதையை எழுதியவரும், பாட்டை எழுதியவரும் ஒரு மூலத்திலிருந்து காப்பியடித்திருக்க வேண்டும். இதற்கு ஒரு உதாரணம் சொல்லுகிறேன். ஒருவன் தன் மனைவிக்குத் தெரியாமல் தன் வைப்பாட்டியைப் பார்ப்பதற்காக இருட்டில் நடந்து சென்றான். அவன் மனைவியோ தன் கணவனுக்குத் தெரியாமல் தன் ஆசைநாயகனைப் பார்க்க அதே இருட்டிலேயே நடந்து சொன்றாள். பரஸ்பரம் ஒருவருக்கொருவர் தெரியாமலே இருவரும் ஒரு குறிப்பிட்ட இடத்தை அடைந்து விட்டார்கன். தன் ஆசைநாயகன் என்று மனைவியும், தன் ஆசைநாயகி என்று கணவனும் நினைத்து, இருட்டில் ஒருவர் கையை ஒருவன் பிடித்துக் கொண்டார்கள். பின்னர் கவனித்துப் பார்த்தபோது தான் இருவருக்கும் குட்டு வெளிப்பட்டது! அவர்களைப் போல, இந்த எழுத்தாளரும், கவிஞரும் ஒரு குறிப்பிட்ட இடத்தில் போய் ஒருவர் கையை - ஒருவர் பிடித்துக் கொண்டார்கள்.

-கு. அழகிரிசாமி சொல்லியது

நல்லதெல்லாம் பிடிக்காது!

நானும் [முல்லை முத்தையா] இன்னும் இரண்டு நண்பர்களும் புதுமைப்பித்தனோடு, ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் போய்க் கொண்டிருந்த போது, ஒரு முறை வழியில் கொத்தமங்கலம் சுப்புவைச் சந்தித்தோம். புதுமைப்பித்தனிடம் தம் கவிதைகளைப் படித்துக்காட்ட வேண்டுமென்று .சுப்புவுக்குப் பெரும் விருப்பம், தம் வீட்டுக்கு எங்கள் எல்லோரையும் அழைத்துச் சென்று தம் கவிகளைப் படித்துக் காட்டினார். எங்களுடைய கஷ்டத்துக்குப் பிரதிபலனாக, அவருடைய வீட்டில் உப்புமா தயாராக்கி இருந்தார். அதைச் சுப்புவின் சகோதரர் எங்களுக்குப் பரிமாறிவிட்டு, அதற்கு நெய் ஊற்றிக் கொண்டு வந்தார். அப்பொழுது புதுமைப்பித்தன், ‘எனக்கு நெய் வேண்டாம்’ என்றார். அதற்கு சுப்பு, அவனுக்கு நல்லதெல்லாம் பிடிக்காது’ என்றார். ‘அதோடு உன் கவிதையையும் சேர்த்துக் கொண்டு விடாதே!’ என்று படீரென்று சொன்னார் புதுமைப்பித்தன்.

கதை தானே

பிரபலமான ஒரு கவிஞர், தன் வாழ்க்கை வரலாற்றை ‘என் கதை’ என்ற பெயரில் எழுதி இருந்தார். புதுமைப்பித்தனிடம் ‘என் கதை’ எப்படி இருக்கிறது? என்றேன். அதற்கு அவர், “அது கதைதான்!” என்றார். [கதைக்கும் வரலாற்றுக்கும் வித்தியாசம் உண்டு என்பதை, நகைச் சுவையாகக் குறிப்பிட்டார்!]

ஒன்வே ட்ராபிக் அல்ல!

புதுமைப்பித்தன் ஒரு நண்பரோடு பழகிக் கொண்டிருந்தார்; அவருக்கு ஏதோ உதவியும் செய்தார். அந்த நண்பர் ஒரு சமயம் புதுமைப்பித்தனின் முக்கிய தேவைக்கு உதவாமல் மெளனமாக இருந்து விட்டார். அதைக் குறித்து புதுமைப்பித்தன் “நட்பு என்பது ஒன்வே ட்ராபிக் அல்ல!’ என்றார்.

எல்லோரையும் தாங்கும் பொறுப்பு

புதிதாக ஒரு லிமிடெட் கம்பெனி ஆரம்பமாகி இருந்தது. டைரக்டர்களுள் ஒருவர் அதிகப்படியான பணம் போட்டிருந்தார். அந்தக் கம்பெனியில். ஆனால் அவருடைய பெயர் எல்லோருக்கும் கடைசியில் [கீழே] ‘லெட்டர் ஹெட்’டில் அச்சிடப் பட்டிருந்தது. ஒரு சமயம் புதுமைப்பித்தனுடன் பேசிக் கொண்டிருக்கும்போது இந்தக் கம்பெனியைப் பற்றிய பேச்சு வந்தது. “அதிகப்படியான பணம் போட்டிருக்கிறதாகச் சொல்லப்படும் நபரின் பெயர் அடியில் இருக்கிறதே ஏன்?” என்றேன். அதற்கு “எல்லோரையும் தாங்கும் பொறுப்பு அவரைச் சேர்ந்தது; அதனால் தான். அவர் அடியில் இருக்கிறார்” என்றார் புதுமைப்பித்தன்.

நிரந்தர வாந்தி பேதி

தமிழ்நாட்டில் கொஞ்ச காலத்துக்கு முன், எந்தப் பத்திரிகையைப் புரட்டினாலும் ஒரு யோகியாரின் கவிதை, கதை, கட்டுரை, காவியம் ஏதாவது ஒன்று தென்படும். அல்லது எல்லாமே நிறைந்திருக்கும். இது பலருக்கும் வெறுப்பை உண்டாக்கியது. அதைப் பற்றி புதுமைப்பித்தன், “அது நிரந்தர வாந்திபேதி” என்றார்.

குளவிக் கூடு

பிரபலமான ஆசிரியர் ஒருவர் தினப் பத்திரிகை ஒன்று நடத்தினார். அதில் ‘குளவிக் கூடு’ என்ற மகுடமிட்டு கிண்டல் விஷயங்கள் எழுதப்பட்டு வந்தன. புதுமைப்பித்தனிடம் ஒரு முறை நான் (முல்லை முத்தையா) ‘குளவிக் கூடு’ எப்படி இருக்கிறது என்று விசாரித்தேன். அதற்கு அவர் “பத்திரிகை மண் மூட விட்டுத்தானே குளவிக் கூடு கட்டும்” என்றார். அந்த வாக்கு உண்மையாகி. பத்திரிகையும் நின்ற மண் மூடி விட்டது.

மேல்மாடி காலி

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளைவின் பிறந்த நாள் சென்னையில் முதன் முதலாக சக்தி காரியாலயத்தில் கொண்டாடப்பட்டது. அந்த விழாவிற்குப் பலரும் வந்திருந்தனர். புதுமைப்பித்தனும் வந்திருந்தார். கு. அழகிரிசாமியும் வந்திருந்தார். இருவருக்கும் அறிமுகம் இல்லை. அப்போது புதுமைப்பித்தனிடம் அழகிரிசாமியை அறிமுகப்படுத்த விரும்பிய நண்பர், அழகிரிசாமியைப் பக்கத்தில் அழைத்து புதுமைப்பித்தனிடம் சொன்னார்: “இவர் உங்கள் சிஷ்யர், உங்கள் எழுத்துக்களில் மிகப்பெரும் ஆர்வம் உடையவர் உங்களைப் பார்க்க வேண்டுமென்னும் ஆவலோடு இருந்தவர்...” உடனே புதுமைப்பித்தன் இடைமறித்து, “சிஷ்யன் என்று சொல்லாதீர்கள், சிஷ்யன் என்றால் மேல் மாடி காலி என்று அர்த்தம். ‘நண்பர்’ என்று சொல்லுங்கள்” என்று சிரித்துக் கொண்டே சொன்னார்.

வயதிலும் அறிவிலும் சிறியவர்களாக இருந்தாலும் அவர்களை, அவர் தமக்கு சமமானவர்களாகக் கருதுவதற்கு இந்த நிகழ்ச்சி ஓர் உதாரணம்.

(கு. அழகிரிசாமி சொல்லியது)

இது உங்களுக்குத்தான்...

எழுத்தாளர்களுக்கும், பதிப்பாளர்களுக்கும் உள்ள, உறவு நிலைமையைப் பற்றி ஒரு சமயம் பேச்சு எழுந்தது. அதற்குப் புதுமைப்பித்தன், “எந்தப் பதிப்பாளர் வந்தாலும் இதை உங்களுக்காகத்தான் எழுதி வைத்திருக்கிறேன்” என்று சொல்ல வேண்டும்; பணத்தை யார் முதலில் கொடுக்கிறார்களோ அவர்களிடம் ‘ஸ்கிரிப்ட்’டைத் தூக்கிக் கொடுத்து விட வேண்டும். அதாவது எழுத்தாளன் தாசியைப் போல் இருக்க வேண்டும்” என்றார்.

ஆத்மாவின் குளிர்ச்சி

புதுமைத்பித்தன் தினமணியில் இருந்த சமயத்தில் அவரும் இன்னும் சில நண்பர்களும் ஹோட்டலுக்குச் சென்றார்கள். சூடாக இட்லி, சாம்பார் கொண்டு வரும்படி சர்வரிடம் சொன்னார் புதுமைப் பித்தன். இட்லி, சாம்பார் வந்தது. இட்லியைத் தொட்டுப் பார்த்துவிட்டுப் புதுமைப்பித்தன் சொன்னார் : “என்னப்பா ஆத்மா குளிர்ந்து விட்டதே” என்றார். (இட்லி ஆறிப் போயிருந்தது -சாம்பார் சூடாக இருந்தது.)

ஊர் திருநெல்வேலியா?

தமிழில் கவிதைகள் எழுதிக்கொண்டிருந்த ஒரு கவிஞரைக் கண்டு, ரசிகமணி டி.கே.சி. ‘உங்களுக்கு ஊர் திருநெல்வேலியா?’ என்று கேட்டிருக்கிறார். இல்லை, ‘எனக்கு ஊர் மதுரை’ என்று சொல்லி இருக்கிறார் அந்தக் கவிஞர். மற்றொரு சமயம் என்னைச் [முல்லை முத்தையா] சந்தித்த அந்தக் கவிஞர், 'நான் நன்றாகக் கவிதை எழுதுகிறேனாம்; அதனால் நான் திருநெல்வேலியாகத்தான் இருக்க வேண்டும், எனக் கருதி, டி. கே. சி. என்னிடம், திருநெல்வேலியா? என்றார். நான் மதுரை என்றதும் அவர் வாயடைத்து விட்டார் என்றார்.

புதுமைப்பித்தனிடம் உரையாடிக் கொண்டிக்கும் போது மேற்கண்ட நிகழ்ச்சியை அப்படியே சொன்னேன். அதற்கு, “அது அல்ல விஷயம், இவ்வளவு மட்டரகமான கவிதைகள் எழுதும் நீ-மனதுக்குள் எண்ணிக்கொண்டு திருநெல்வேலியா? என்று சந்தேகத்துடன் கேட்டிருக்கிறார். இல்லை, மதுரை என்று அவர் சொன்னதும் தான் எண்ணியது சரிதான் என்று டி.கே.சி. தீர்மானித்துக் கொண்டார். இவ்வளவுதான் விஷயம்” என்றார்.

நீ ஏமாந்து போவாய்

ஒரு பதிப்பாளர் புதுமைப்பித்தனிடம் இரண்டு மூன்று முறை வந்தார். அவருக்குத் தருவதாகச் சொன்ன விஷயம் எழுதப்படாமலே கடத்தி வந்தார். அந்தப் பதிப்பாளர். நல்ல ஏர்கண்டிஷன் ரூமிலே, ஒரு சொம்புத் தண்ணீர், வெற்றிலை, சீவல், புகையிலை இவைகளுடன் உங்களை வைத்துப் பூட்டிவிட்டு சிறிது நேரத்திற்குப் பிறகு திறந்து பார்த்தால் அழகாக எழுதி வைத்திருப்பீர்கள்” என்றார். அதற்குப் புதுமைப் பித்தன், ‘அதுதான் இல்லை நீ ஏமாந்து போவாய், தண்ணீரைக் குடித்துவிட்டு, வெற்றிலை எல்லாம் போட்டுக் கொண்டு ஆனந்தமாகத் தூங்கி எழுந்திருப்பேன்” என்றார்.

வாழ்த்து அல்ல - வணக்கம்!

மரபு, பண்பு இவை சரிவரத் தெரியாமல் கவிதைகள் எழுதி வருகிறார்கள் என்பதைப் பற்றி புதுமைப்பித்தன் ஒரு சமயம் சொல்லிக் கொண்டிருக்கும்போது, ஒரு கவிஞரைப் பற்றி வெளிவந்த தொகுப்பு நூலைப் பார்க்க நேர்ந்தது. அந்தப் புத்தகத்தில் குறிப்பிட்ட கவிஞர் ஒருவருக்குச் சிஷ்யர் என்ற கவிஞர் ஒருவரும் அவரைப் பாராட்டி ஒரு கவிதை எழுதியிருந்தார். அதில், ‘...எந்தன் ஆசான், பீடெல்லாம் பெற்று வாழ்க!’ என்று இருந்தது. ஆசானுக்கு வாழ்த்துக் கூறுவதில்லை. வணக்கம் தான் கூற வேண்டும். இதைச் சொல்லுங்கள் அந்தக் கவிஞரிடம்!” என்றார் புதுமைப் பித்தன்.

தலைப்பாக் கட்டாதீர்

புதுமைப்பித்தன் வீட்டிலே ஒரு முறை பலர் பேசிக் கொண்டிருந்தோம். அப்போது ஒரு நண்பர், 'தான் ஒரு குறிப்பிட்ட பணத்தை எதிர்பார்ப்பதாகவும் அந்தப் பணம் வந்ததும் தன்னுடைய சொந்த உபயோகத்துக்கு ஒரு கார் வாங்க எண்ணியிருப்பதாகவும்' கூறினார். அவர் ஒரு வியாபாரமும் செய்யாமல் வெறுமனே இருப்பவர். பணம் வந்தால் ஏதேனும் ஒரு வியாபாரத்தில் ஈடுபடாமல், கார் வாங்கப்போவதாக கூறியது புதுமைப்பித்தனுக்குப் பிடிக்கவில்லை. எனவே வெறுப்புடன், ‘வேஷ்டியை அவிழ்த்து தலைப்பாக் கட்டிவிடாதீர், என்றார்.

காலத்தேவா அடிச்சு விடு

ஒரு பத்திரிகையில் அதன் ஆசிரியர், ‘காலத் தேவன் அடிச்சுவடு’ என்ற தலைப்புடன் ஒரு ஆராய்ச்சி விஷயத்தைத் தொடர்ந்து எழுதி வந்தார். அந்தக் கருத்துக்கள் புதுமைப்பித்தனுக்குக் கொஞ்சமும் பிடிக்கவில்லை. விஷயம் ஒன்றிருக்க இவர் எதையோ ‘அடிச்சு விடுகிறார்’ அதற்கு நான் மறுப்பு எழுதப் போகிறேன். உன்னுடைய ‘முல்லை’யில், “காலத்தேவா அடிச்சு விடு” என்ற தலைப்புடன் என்னுடைய கட்டுரை வெளிவருவதாக விளம்பரப்படுத்திவிடு என்றார் புதுமைப்பித்தன். அவருடைய தலைப்பே அதற்கு மறுப்பாகவும் சவாலாகவும் அமைந்திருத்தது.

கோவணம் கிழித்து விடுதல்

தமிழ்ப் புத்தகங்களைப் பற்றியும் பதிப்பாளர்களைப் பற்றியும் பேசிக் கொண்டிருந்தார். புதுமைப்பித்தன். சின்னஞ் சிறு புத்தகங்களாக வெளியிடுவது புதுமைப்பித்தனுக்குப் பிடிப்பதில்லை அப்போது “கோவணம் கிழித்து விடுவது”-அது ரொம்ப சுலபமாயிருக்குமல்லவா? என்றார் புதுமைப்பித்தன்.

குடுகுடுப்பைக்காரன் சட்டை

நம்முடைய தமிழ்ப்படத் தயாரிப்பாளர்கள் பிற படங்களைப் பார்த்துக் காப்பியடிக்கிறார்கள் என்பதைப் பற்றி ஒரு முறை உரையாடிக் கொண்டிருந்தோம். அப்போது புதுமைப்பித்தன், “ஒரு பட முதலாளி, தன்னுடைய படம் எடுத்து முடிக்கும் வரை மற்ற படங்களைப் பார்க்கக்கூடாது என்று தடை விதிக்க வேண்டும்; இல்லையானால் அவர் எடுக்கும் படம் குடுகுடுப்பைக்காரன் சட்டை போலாகிவிடும்” என்றார்.

முன்னுரை எழுதவில்லை

ரகுநாதனின் புத்தகம் ஒன்றிற்கு புதுமைப் பித்தன் முன்னுரை எழுதுவதாக இருந்தது. ரகுநாதன் ஆசிரியராக இருந்து முல்லை முத்தையா நடத்திய ‘முல்லை’ மாத இதழில் ரகுநாதனின் நூல் வெளிவரவிருக்கும் விவரம் பற்றி அறிவிப்பும் வந்தது, ஆனால் புதுமைப்பித்தனால் அந்நூலுக்கு முன்னுரை எழுத இயலாது போயிற்று அதன் பின்னர் தாம் எழுதிய எல்லா நூல்களுக்கும் தாம் மட்டுமே முன்னுரை எழுதினார் ரகுநாதன்

திருப்பூர் கிருஷ்ணன்

தினமணி

புதுமைப்பித்தனின் எச்சரிக்கை!

“...இவையாவும் கலை உதாரணத்திற்கென்று கங்கணம் கட்டிக்கொண்டு செய்த சேவை அல்ல. இவையாவும் கதைகள். உலகை உய்விக்கும் நோக்கமோ, கலைக்கு எருவிட்டுச் செழிக்கச் செய்யும் நோக்கமோ, எனக்கோ, என் கதைகளுக்கோ சற்றும் கிடையாது. நான் கேட்டது. கண்டது, கனவு கண்டது, காண விரும்பியது, காண விரும்பாதது ஆகிய சம்பவக் கோவைகள் தாம் இவை.

...நான் கதை எழுதுகிறவன். கதையிலே சல் உயிர்ப்பெற்று மனிதத் தன்மை அடைந்துவிடும். மூட்டைப் பூச்சி அபிவாதயே சொல்லும். அதற்கு நான் என்ன செய்யட்டும்? கதையுலகத்தின் நியதி அது. நீங்கள் கண்கூடாகக் காணும் உலகத்தில், மனிதன் கல்லுப் பிள்ளையார் மாதிரி உட்கார்ந்திருப்பதைப் பார்க்கவில்லையா? மனிதன் கல் மாதிரி இருக்கும்போது கல்தான் சற்று மனிதன் மாதிரி இருந்து பார்க்கட்டுமே. தவிரவும் பழைய கதைகளை எடுத்துக் கொண்டு அதை இஷ்டமான கோணங்களிலெல்லாம் நின்றுகொண்டு பார்க்க எங்களுக்கு உரிமையுண்டு.

...பொதுவாக என்னுடைய கதைகள் உலகத்துக்கு உபதேசம் பண்ணி உய்விக்க ஏற்பாடு செய்யும் ஸ்தாபனம் அல்ல, பிற்கால நல்வாழ்வுக்குச் செளகரியம் பண்ணி வைக்கும் இன்ஷ்யூரன்ஸ் ஏற்பாடு அல்ல. எனக்குப் பிடிக்கிறவர்களையும், பிடிக்காதவர்களையும் கிண்டல் செய்து கொண்டிருக்கிறேன். சிலர் என்னோடு சேர்ந்துகொண்டு சிரிக்கிறார்கள். இன்னும் சிலர் கோபிக்கிறார்கள். இவர்கள் கோபிக்கக் கோபிக்கத்தான் அவர்களை இன்னும் கோபிக்க வைத்து முகம் சிவப்பதைப் பார்க்க வேண்டும், என்று ஆசையாக இருக்கிறது. ஆனால் இப்படிக் கோபிப்பவர்கள் கூட்டம் குறைய குறையத்தான் எனக்குக் கவலை அதிகமாகி வருகிறது.

இவர் இன்னமாதிரித்தான் எழுதுவது வழக்கம் அதைப் பாராட்டுவது குறிப்பிட்ட மனப்பக்குவம் தமக்கு இருப்பதாகக் காட்டிக் கொள்ளும் என்றாகி, என்னைச் சட்டம் போட்டுச் சுவரில் மாட்டிப் பூப் போட்டுப் மூடிவிடுவதுதான் என் காலை இடறி விடுவதற்குச் சிறந்த வழி. அந்த விளையாட்டெல்லாம் என்னிடம் பலிக்காது. மனப்போக்கிலும், பக்குவத்திலும் வெவ்வேறு உலகில் சஞ்சரிப்பதாக நினைத்துக்கொண்டு நான் வெகு காலம் ஒதுங்க முயன்ற கலைமகள் பத்திரிகை என் போக்குக்கெல்லாம் இடம் போட்டுக்கொடுத்து வந்ததுதான் நான் பரம திருப்தியுடன், உங்களுக்குப் பரிசயம் செய்து வைக்கும் காஞ்சனை, நீங்கள் இவைகளைக் கொள்ளாவிட்டாலும் நான் கவலைப்படவில்லை. வாழையடி வாழையாகப் பிறக்கும் வாசகர்களில் எவனோ ஒருவனுக்கு நான் எழுதிக் கொண்டிருப்பதாகவே மதிக்கிறேன்.”

புதுமைப்பித்தன் எழுதிய கதை கட்டுரைகளில் மூழ்கி எடுத்த முத்துக்கள்...

* * *

அங்கிகரீக்கப்படும் பொய்

நான் கதை எழுதுகிறேன்; அதாவது, சரடு விட்டு, அதைச் சகிக்கும் பத்திரிகை ஸ்தாபனங்களிலிருந்து பிழைக்கிறவன்; என்னுடையது அங்கீகரிக்கப்படும். பொய்; அதாவது-கடவுள், தர்மம் என்று பல நாம ரூபங்களுடன், உலக ‘மெஜாரிட்டி’யின் அங்கீகாரத்தைப் பெறுவது; இதற்குத்தான் சிருஷ்டி, கற்பனாலோக சஞ்சாரம் என்றெல்லாம் சொல்லுவார்கள் இந்த மாதிரியாகப் பொய் சொல்லுகிறவர்களையே இரண்டாவது பிரம்மா என்பார்கள்.

மனதின் மகிழ்ச்சி

பக்கத்துக் கட்டிலில் என் மனைவி தூங்கிக் கொண்டிருந்தாள் தூக்கத்தில் என்ன கனவோ? உதட்டுக் கோணத்தில் புன் சிரிப்பு கண்ணாம்பூச்சி விளையாடியது. வேதாந்த விசாரத்துக்கு மனிதனை இழுத்துக் கொண்டு போகும் தன்னுடைய நளபாக சாதுர்யத்தைப்பற்றி இவள் மனசு கும்மாளி போடுகிறது போலும்!

வெட வெடப்பு

என் மனைவியைத் தனியாக அங்கு விட்டிருக்க மனம் ஒப்பவில்லை. என்ன நேரக் கூடுமோ? பயம் மனசைக் கவ்விக்கொண்டால், வெட வெடப்புக்கு வரம்பு உண்டா?

யாரிடமும் சொல்ல முடியுமா?

தன் மனைவி........ போகிறாள் என்ற மனக் கஷ்டத்தை, தன்னைத் தேற்றிக் கொள்வதற்காக வேறு யாரிடமும் சொல்லிக் கொள்ள முடியுமா?

வம்ச விருத்தியின் சிறப்பு

அவருக்கு ஒரு புதல்வி. எந்த மதத்தினரானாலும், உபாத்தியாயர்களுக்கு மட்டும் வம்ச விருத்தியில் தனிச் சிறப்பு உண்டு.

யாருக்கு விதிவிலக்கு?

வகுப்பில் இரண்டு கெட்டிக்காரர்கள் இருந்தால், இரண்டு பேர்களுக்கும் நட்பு ஏற்படுவது இயற்கை; பகைமை ஏற்படுவதும் சகஜம். இவை இரண்டும் அற்று இருப்பது விதிக்கு விலக்கு.

உடனே கவனிக்கக் கூடியவர்கள்

உணர்ச்சி விஷயங்களில், இனிமேல் என்ற பிரச்சினையைப் பெண்களே சீக்கிரத்தில் கவனிக்கக் கூடியவர்கள், தன்னை ஒப்பு க்கொடுப்பது, தன்னுடைய வாழ்க்கையை ஓர் ஆண்மகனிடம் பணயமாக வைப்பது எவ்வளவு சீக்கிரத்தில் நடக்கிறதோ, அவ்வளவு விரைவிலேயே வருங் காலத்தைப் பற்றித் திட்டம் போடும் திறனும் படைத்து விடுகிறார்கள் அப் பெண்கள்.

எது கோழைத்தனம்?

ஆபிஸிற்கு வந்து விடுவது என்றால், அது வீட்டுத் தொந்தரவுகளை எல்லாம் ஒரு பெண்ணின் தலையில் போட்டுவிட்டு, அங்கு வந்து ஒளிந்து கொள்ளும் கோழைத்தனம் என்று பட்டது.

சந்நியாச உலகம்

வீட்டிற்குப் போவதற்குக் கூட மனமில்லை. கையில் பணக்கஷ்டம் ஏற்பட்டு விட்டால், சந்நியாச உலகம் மோட்ச சாம்ராஜ்யமாகத் தோன்றும்.

பட்டணம் எப்படி மாறுகிறது?

சாயந்திரமாகி விட்டால், நாகரிகம் என்பது இடித்துக் கொண்டும் இடிபட்டுக் கொண்டும் போக வேண்டிய ரஸ்தா என்பதைக் காட்டும்படியாகப் பட்டணம் மாறிவிடுகிறது.

குழந்தை செய்த தானம்

அவன் குழந்தை கொடுத்ததைச் சட்டென்று வாங்கிக் கொண்டான். அது ஒரு புதுத் தம்படி கோடீசுவரர்கள் அன்னதான சமாஜம் கட்டிப் பசிப் பிணியைப் போக்கிவிட முயல்வதுபோல் கடலில் காயம் கரைத்து வாசனையேற்றி விட முயலுவது போல், குழந்தையும் தானம் செய்து விட்டது.

உபவாச மகிமை

கொழும்புக்குப் போவதென்றால் மேல்துண்டுடன், அதையே துணையாக நம்பிச் செல்லுகிறவர்களுக்கு உபவாச மகிமைதான் ஸ்டேஷனில் காத்திருக்கும்.

தெய்வபக்தி அவசியமா?

வர்த்தகத்திற்கும் ஏகாதிபத்தியத்திற்கும் ராணுவ பலம் எவ்வளவு அவசியமோ, அவ்வளவு தெய்வ பக்தியும் அவசியம்.

பக்திப் பெருக்கு

தனித்தனி நபரின் பக்திப் பெருக்கு டைபாயிட் வியாதியஸ்தனின் டெம்பரேச்சர் படம் மாதிரி அன்றைய வியாபார ஓட்டத்தைப் பொறுத்ததாக இருந்தாலும், பொதுவாகச் சங்கத்தினரின் முழு ஆதரவு இருந்ததால் விநாயகர் பாடு சராசரி பக்தி விகிதத்திற்கு மோசமாகி விகிதத்திற்கு மோசமாகி விடவில்லை .

எரிமலையின் சீற்றம்

மேலும் பிள்ளையாரைப் போல் நிர்விசார சமாதியிலிருக்க அவர் கல் அல்ல. அவர் மனசில் எரிமலைகள் சீறின; புதிய சமூக சாஸ்திரங்கள், ஒழுக்கக் கட்டுப்பாடுகள் தோன்றின.

எல்லாம் சேர்ந்த உருவம்

வீரபாண்டியன் பட்டணத்தில் ஒரு சிறு பகுதியாகவே அவர் சென்னையில் நடமாடினார். ஜீவனோபாயம், பிறகு செளகரியபட்டால் பிறருக்கு உதவி, சமூகத் தொடர்புகளுக்குப் பயந்து பணிதல் எல்லாம் சேர்ந்த உருவம் ஸ்ரீ சுப்பையாப் பிள்ளை.

பிரச்சினைகளை மறப்பது எப்படி?

ஊர்ப் பேச்சு, தற்சமயம் பிரச்சனைகளை மறப்பதற்குச் செளகரியமாக, போதை தரும் கஞ்சா மருந்தாகவே அந்தத் தம்பதிகளுக்கு உபயோகப்பட்டு வந்தது.

எதுவரையில் பொறுக்கலாம்?

மனிதன் ஒரு நிலைமை வரையில்தான் பொறுத்துக் கொண்டு இருக்க முடியும் தலைக்கு மேல் வெள்ளம் சென்றால்?

யாரைக் கொள்ளையடிக்கலாம்?

நம்மைத் திருடுகிற இந்தப் பயல்களைக் கொள்ளையடித்தால் எந்தத் தர்ம சாஸ்திரம் ஓட்டையாகப் போகிறது.

நியாயமான உலகம்

பலவந்தத் திருட்டு கேஸாகியது, ஆறு மாசக் கடுங்காவல்.

பத்தர் பாடு கவலையற்ற சாப்பாடு. எந்தத் தொழிலாளர் சங்கம் திருட்டு தொழிலாளியின் குடும்பத்திற்கு இந்த மாதிரி உதவி செய்ய முடியும்? நியாயமான உலக மல்லவா?

நம்பிக்கையும் வலுவும்

முற்பகல் சூரிய ஒளி சற்றுக் கடுமை தான். என்றாலும் கொடிகளின் பசுமையும் நிழலும், இழைந்து வரும் காற்றும், உலகின் துன்பத்தை மறைக்க முயன்று நம்பிக்கையையும் வலுவையும் தரும் சமய தத்துவம் போல் இழைந்து மனசில் ஒரு குளுமையைக் கொடுத்தன.

தர்மத்தின் வேலி

தர்மத்தின் வேலிகள் யாவும் மனமறிந்து செல்பவர்களுக்கே. சுயப்பிரக்ஞை இல்லாமல் வழு ஏற்பட்டு, அதனால் மனுஷவித்து முழுவதுமே நசித்து விடும் என்றாலும், அது பாபம் அல்ல; மனலயிப்பும், சுயப்பிரக்ஞையுடன் கூடிய செயலீடுபாடுமே கறைப்படுத்துபவை.

உண்மை எப்போது பிறக்கும்?

“உணர்ச்சியின் சுழிப்பிலேதானே உண்மை பிறக்கும்” [என்றார் கோதமர்]

எத்தகைய தரிசனம்?

வலுவற்றவனின் புத்திக்கு எட்டாது நிமிர்ந்து நிற்கும் சங்கரனுடைய சிந்தனை கோயில் போல. திடமற்றவர்களின் கால்களுக்குள் அடைபடாத கையலங்கிரியைப் பணிச் சிகரங்களின் மேல் நின்று தரிசித்தார்கள்.

மனதால் இயலும்

காலக் களத்தின் நியதியை மனசைக் கொண்டு தவிர, மற்றபடித் தாண்டி விட முடியுமா?

குழந்தையைக் கொல்லலாமா?

“குழந்தை வைத்த நெருப்பு ஊரைச் சுட்டு விட்டால் குழந்தையைக் கொன்று விடுவதா?” (என்றாள் கைகேயி)

சத்துரு எது?

“மனிதருக்குக் கட்டுப்படாத தர்மம், மனித வம்சத்துக்குச் சத்துரு” [என்று கொதித்தாள் அகலிகை)

உண்மையை நிரூபிக்க முடியுமா?

“உள்ளத்துக்குத் தெரிந்தால் போதாதா? உண்மையை உலகுக்கு நிரூபிக்க முடியுமா?” (என்றாள் அகலிகை)

நிரூபித்தால் மட்டும் போதுமா?

“நிரூபித்து விட்டால் மட்டும் அது உண்மையாகி விடப் போகிறதா; உள்ளத்தைத் தொட வில்லையானால்?

எது சமூக சேவை.

ராஜபக்தியும், சமூக சேவையும் ஒத்து வராத இந்தக் காலத்தில், மரியாதையாகச் சமூக சேவை என்று சொல்லப்படும் தமது பெஞ்சு மாஜிஸ்திரேட் பதவில் கொஞ்சம் பெருமையுண்டு.

ஊரை ஏமாற்றுகிறவர்கள்

“சிக்கிரிப் பவுடர் காப்பி மாதிரிதான் இருக்கும்; ஆனால் காப்பி அல்ல; சில பேர் தெய்வத்தின் பேரைச் சொல்லிக் கொண்டு ஊரை ஏமாற்றி வருகிற மாதிரி” (என்றார் கந்தசாமிப் பிள்ளை.)

ஆளா! வியாதியா!

உங்களுக்கு, நான் வைத்தியத்தை ஜீவனோபாயமாக வைத்திருக்கிறேன் என்பது ஞாபகம் இருக்க வேண்டும். வியாதியும் கூடுமான வரையில் அகன்று விடக் கூடாது, ஆசாமியும் தீர்ந்து விடக் கூடாது. அப்பொழுதுதான், சிகிச்சைக்கு வந்தவனிடம் வியாதியை ஒரு விபாபாரமாக வைத்து நடத்த முடியும். ஆள் அல்லது வியாதி என்று முரட்டுத் தனமாகச் சிகிச்சை பண்ணினால், தொழில் நடக்காது. வியாதியும் வேகம் குறைந்து படிப்படியாகக் குணமாக வேண்டும்; மருந்தும் வியாதிக்கோ மனுஷனுக்கோ கெடுதல் தந்து விடக் கூடாது. இதுதான் வியாபார முறை (கந்தசாமிப் பிள்ளை கூறுகிறார்.)

தெரிந்த தொழிலால் பிழைக்க முடியாது

இரண்டு பேரும் மெளனமாக இருந்தார்கள். “தெரிந்த தொழிலைக் கொண்டு லோகத்தில் பிழைக்க முடியாது போல இருக்கே” என்றார் கடவுள்.

எதிரியின் மீது பாயலாமா?

தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்காக எதிரியின் மீது பாய்வது உயிர்ப் பிராணிகளின் இயற்கைக் குணம் [சுப்பனும் ஒரு ஜீவன் தானே!]

யார் நல்லவன்

வெள்ளிக்கிழமை மத்தியானம் வெயிலின் ஆதிக்கம் ஹிட்லரை நல்லவனாக்கியது.

வடிகட்டின அசடர்கள் யார்?

வாழ்க்கைக்கு அவசியமான உலக அநுபவம் உண்டு; ‘படித்தவர்’களைப் போல் அவர்கள் வடிகட்டின அசடர்கள் அல்ல.

அழகாகப் பிறக்கக் கூடாதா?

ஏழையாகப் பிறந்தால் அழகாகப் பிறக்கக் கூடாது என்று விதியிருக்கிறதா?

வசிகரிப்பது எப்படி?

கல்யாணியின் அழகு, ஆளை மயக்கியடிக்கும் மோகலாகிரியில் பிறந்த காம சொரூபம் அன்று. நினைவுகள் ஓடி மறையும் கண்கள். சோகம் கலந்த பார்வை. அவளது புன்னகை ஆளை மயக்கா விட்டாலும் ஆளை வசிகரிக்கும் அப்படி வசீகரிக்ப் படாதவன் மண் சிலை தான்.

அவளும் ஒரு பெண்தானே!

கல்யாணியும் ஒரு பெண்ணாயிற்டிே, அவளுக்கும் இயற்கையின் தேவையும் தூண்டுதலும் இருக்குமே என்ற ஞானம் சிறிதும் கிடையாது போயிற்று (சுப்புவையருக்கு.)

யாரால் கட்டப்பட்டது!

சுப்புவையரின் வீடு, ஜன்னல்களுக்குப் பெயர் போனதன்று. காற்றும் ஒளியும் உள்ளே எட்டிப் பார்க்கக் கூடாது என்று சங்கற்பம் செய்து கொண்ட சுப்புவையாரின் மூதாதைகளில் ஒருவரால் கட்டப்பட்டது.

வாழ்க்கையை எங்கு கழிக்கலாம்!

மனிதப் புழுக்களே இல்லாத, மனிதக் கட்டுப் பாடற்ற, மனித நாகரிகம் என்ற துர்நாற்றம் வீசாத கானகத்தில், வாழ்க்கையையே ஓர் இன்பப் பெருங்கனவாகக் கழித்தால் என்ன?

உலகம் அர்த்தமற்றதா!

[சர்மாவுக்கு] உலகம் - அர்த்தமற்ற கேலிக் கூத்துப் போலும், அசட்டுத்தனம் போலும் பட்டது.

வீட்டுச் சொந்தக்காரனின் நினைப்பு

சென்னையில் ‘ஒட்டுக் குடித்தனம்’ என்பது ஒரு ரசமான விஷயம். வீட்டுச் சொந்தக்காரன் குடியிருக்க வருகிறவர்கள் எல்லோரும் ‘திருக்கழுக்குன்றத்துக் கழுகு’ என்று நினைத்துக் கொள்வானோ என்னமோ?

மூன்றெழுத்து மந்திரம்

பிள்ளையவர்களைப் பொறுத்தவரை, அவர் இந்தப் பணம் என்ற மூன்றெழுத்து மந்திரத்தில் தீவிர சிந்தை செலுத்துபவர்.

யாருக்கு அதிர்ஷ்டம்

நான் பத்திரிகையை விட்டுவிட்டா, கதை எழுதாமல் இருந்து விடுவேனோ? ஒரு பெரிய நாவலுக்குப் ‘பிளான்’ போட்டிருக்கேன். தமிழன்களுக்கு அதிர்ஷடம் இருந்தால், எனக்குக் காகிதம் வாங்கவாவது காசு கிடைக்கும்.

நிஜமானது எது?

வாழ்க்கையில் ஒன்று தான் நிஜமானது. அர்த்தமுள்ளது. அது தான் மரணம்.

மிருக இச்சை

காதல், வெறும் மிருக இச்சை; பூர்த்தியாகாத மனப் பிராந்தியில் ஏற்பட்ட போதை.

சமூக இயல்பு

பெரிய மீன் சின்ன மீனைத் தின்னலாம், ஆனால் சின்ன மீன் அதற்கும் சின்ன மீனைத் தின்றால் பெரிய மீன் ‘குற்றம் செய்கிறாய்!’ என தண்டிக்க வருகிறது. இது தான் சமூகம்!

யாருக்கு உரிமை?

இளமை, மூப்பு, சாக்காடு என்பவை மனிதருக்கு மட்டும் உரிமையில்லை. எனவே, தெரு விளக்கிற்கும் இப்பொழுது மூப்புப் பருவம்.

உதையும் குத்தும்

பிள்ளையவர்கள் மிகவும் சாது; அதாவது படாடோபம், மிடுக்கு, செல்வம், அகம்பாவம் முதலியனவற்றின் உதைகளையும் குத்துக்களையும் ஏற்று ஏற்று மனமும் செயலும், எதிர்க்கும் சக்தி யையும், தன்னம்பிக்கையையும் அறவே இழந்து விட்டன.

சகோதரிகளாக நினை!

குற்றத்தின் பாரமே உருவாக இந்திரன் நிற்கிறான். “அப்பா இந்திரா! உலகத்துப் பெண்களைச் சற்று சகோதரிகளாக நினைக்கக்கூடாதா? கெளத முனிவர் கூறுகிறார்.

எப்படி வாசிக்க வேண்டும்?

“சாஷ், இப்பொ அதுதான் வேணும், வாசிக்கிறவாள் எல்லாம், மாடு பருத்திக் கொட்டை தின்கிற மாதிரி எதையானாலும் விதரணை இல்லாமல் வாசிக்கிறா”.

புத்தக வியாபாரம்

இந்த புஸ்தக வியாபாரமே கேப் மாறி ஜாதிக்குத்தான் சரி!

தியாகத்தின் பலிபீடம்

“கொள்கைக்காக நீர் தியாகம் செய்து கொள்ள முயலுகிறீர்; அது வேண்டாம் நான் உமக்குப் போகக் கருவியாகத்தான், உமது தியாகத்தின் பலிபீடமாகத்தான் நீர் கருதுவீர். அது எனக்கு வேண்டாம். நான் காதலைக் கேட்கவில்லை. தியாகத்தைக் கேட்கவில்லை. நான் தேடுவது பாசம்...

சுகமாக இருப்பது எப்படி?

சுகமாக இருக்க விரும்புவது தான் மனித இயற்கை என்பது தகப்பனார் அனுபவம். அதில் இன்பம் கிடையாது என்பதுதான் பையன் சித்தாந்தம். தகப்பனாருக்குப் பையன் நடத்தை. அர்த்தமாகவில்லை.

எது முட்டாள்தனம்?

மனிதன் என்றால், நிதானம் தவறி விடுவது இயற்கை. தவறின நிலையிலேயே நின்று உழன்று கொண்டிருப்பது என்பது படு முட்டாள் தனம்.

சில நிமிஷ உல்லாசம்

சில நிமிஷ நிம்மதிக்காக, சில நிமிஷ உல்லாசத்திற்காக, விலங்கை மீண்டும் நாமே எடுத்துப் பூட்டிக் கொள்வது புத்திசாலித்தனம் இல்லை.

நெருப்பைச் சுற்றி வட்டமிடலாமா?

விட்டில் பூச்சி மாதிரி நெருப்பைச் சுற்றிச் சுற்றி வட்டமிட்டால் சிறகு தீய்ந்து போகாமல் என்ன செய்யும்?

ஆசை எது?

ஆசை என்று நினைத்துக் கொண்டு சகதிக்குள் காலை விட்டுக் கொள்ள முடியுமா?

தண்ணீரில் பால் கலப்பது

நீரோ மாமிச பட்சணி, நானோ சாத்வீக உணவுக்காரன், எண்ணெய்க்கும் தண்ணீருக்கும் சரிபட்டு வருமா? உறவு என்றால் தண்ணீரில் பால் கலப்பது மாதிரி இருக்க வேண்டும் என்பது ஆன்றோர் வாக்கு.

காககையின் ஓலம்

விழுந்த காக்கையைச் சுற்றி ஓலமிடும் காக்கை மாதிரிதான் செண்பகராமன் பிள்ளை கத்தினார்.

கற்பைப் புகுத்தலாமா?

கற்பு நிலை என்னவென்பது எனக்கு நன்கு தெரியும். பிறர் புகுத்திக் கற்பு நிலை ஓங்குவது அனுபவ சாத்தியமான காரியமன்று.

நெருப்பில் எண்ணெய்

(கடிதத்தைப் பார்த்ததும் பூர்ணங்கலித்தின் துக்கம்) நெருப்பில் எண்ணெயிட்டது போலாயிற்று.

உரிமை இல்லையா?

சுதந்திரத்துக்கும் காதலுக்கும் ஹிந்து சமூகத்தில் உரிமை இல்லை என்கிறார்கள். பார்த்துக் கொள்வோம்.



மனிதனின் ஆசை எது?

மனிதனுக்குப் பிணத்தைப் பார்க்கும் ஆசை, எல்லா ஆசைகளையும் விடப் பெரிது. பயத்தில் பிறந்த ஆசையோ என்னவோ?

கலியாணம் என்றால் என்ன?

கலியாணம் என்ற பதத்திற்கு அகராதியில் ஒரு அர்த்தம் இருக்கலாம். கவிஞனது வியாக்யானம் ஒன்று இருக்கலாம். அதெல்லாம் எனக்குத் தெரியாது. நடைமுறை உலகத்திலே இந்த மகத்தான கலியுகத்திலே, திருமணம் என்றால் குலப் பெருமை கிளத்தும் கலகாரம்பம் என்று பெயர்.

மனிதர்கள் ஆக்குவது எப்படி?

கோழைத்தனம் பிறப்புரிமையாக இருக்கிற இந்தப் புழுக்களை மனிதர்கள் ஆக்குவது எப்படி?

அர்த்தமற்ற வார்த்தை எது?

மரண தண்டனை அனுபவிக்கும் ஒருவன் சார்லி சாப்ளின் சினிமாவை அனுபவிக்க முடியுமா? வைதவ்ய விலங்குகளைப் பூட்டிவிட்டுச் சுவாரஸ்யமான பிரசங்கத்தைக் கேள் என்றால் அர்த்தமற்ற வார்த்தையல்லவா அது. (‘வைதவ்ய விலங்கு’ என்பது சமூகத்தின் கொடுமையான கட்டுப்பாடுமூடக்கொள்கை.)

வழி எது?

தொல்லை தீர வழி இருக்கும் பொழுது, தர்ம சாஸ்திரமா குறுக்கே நிற்க முடியும்?

யாரிடத்தில் செல்லும்?

பிரசங்கங்கள் படித்தவர்களிடத்தில் செல்லும்; இந்த வாயில்லா பூச்சிகளிடத்தில்?

இயற்கையின் பூரண கிருபை

ஒரு தடவை ஆதனூருக்கு வந்திருந்தான். அப்பொழுது கருப்பனின் மகளுக்கு வயது வந்து விட்டது. நல்ல இயற்கையின் பூரண கிருபை இருந்தது.

கிராமத்தின் அழகு

சாட்சி சொன்ன கோமுட்டிச் செட்டி கண்ட குதிரையைப் போல், பட்டணத்தின் தொந்தரவுகளுடன் கிராமத்தின் அழகையும் பெற்றிருந்தது.

சட்டம் இருக்கிறதா?

ராமனுடைய பெயரை வைத்துக் கொண்டால் ராமன்போல் வீரனாக இருக்க வேண்டும் என்று எங்காவது சட்டம் இருக்கிறதா?

அன்பு இல்லையா?

‘ஸ்தோத்திரம்’ என்று வார்த்தை வராது. அதற்கென்ன? உள்ளத்தைத் திறந்து அன்பை வெளியிடும்பொழுது தப்பிதமாக இருந்தால், அன்பில்லாமல் போய்விடுமோ?

‘சும்மா’ இருக்க மாட்டார்கள்

தெய்வத்தின் அருளைத் திடீரென்று பெற்ற பக்தனும், புதிதாக ஒரு உண்மையைக் கண்டு பிடித்த விஞ்ஞானியும், ‘சும்மா’ இருக்க மாட்டார்கள். சளசளவென்று கேட்கிறவர்கள் காது புளிக்கும் படி சொல்லிக் கொட்டி விடுவார்கள்.

‘செல்வோம்! செலவோம்!’

இந்தச் ‘செல்வம்’ என்ற சொல் ‘செல்வோம் செல்வோம்’ என்ற பொருள்பட நின்றதாம். அதிலே தமிழுக்கு வேறே பெருமை.

வண்டிச் சக்கரம் போல

‘செல்வம் இருக்கிறதே, அது வெகுபொல்லாதது. இன்று ஒரு இடத்தில் இருக்கும், நாளை ஒரு இடத்தில் இருக்கும்; அதோ அந்த வண்டிச் சக்கரம் போல. அதைத் துறந்தால்தான் மோட்சம்...’

செல்வத்தின் தீமை!

நம்மவருக்குச் செல்வத்தின் தீமையைப்பற்றிச் சொல்லுவது. நபும்ஸ்கனுக்கு பிரமச்சரியத்தின் உயர்வைப் பற்றி உபதேசிப்பது போல்தான்.

எது நிலையானது?

செல்வம் நிலையில்லாதது என்று கடிந்து கொள்ளுகிறீர்களே! எதுதான் உலகத்தில் நிலையாக இருக்கிறது?

நம்மைப் போல்தான்!

கடவுளைப் பற்றி வெகுலேசாக, எப்பொழுதும் இருக்கிறார் என்று கையடித்துக் கொடுப்பார்கள். நம்மவர்கள், கடவுளும் நம்மைப்போல், பிறந்து வளர்ந்து அழிகிறவர்தான்.

அசட்டு வேதாந்தம்

அந்த ட்ராம் கார் நண்பர் மாதிரி. நமக்கு அசட்டு வேதாந்தம் வேண்டாம். அஸ்திவாரக் கப்பிகளை நன்றாகக் கட்டிவிட்டுப் பிறகு மெத்தைக்கு என்ன வார்னிஷ் பூசலாம் என்று யோசிக்கலாம்.

வீணையும் விரலும்

இருவர் வாழ்க்கையும் வீணையும் விரலும் விலகியிருப்பது போன்ற தனிப்பட்ட கூட்டு வாழ்க்கையாக இருந்தது.

நல்ல பொருள் எது?

மனிதனுக்கு ......... தனக்குக் கிடைப்பது நல்ல பொருளாக இருக்க வேண்டும், என்ற ஆசையினால்தான் இருக்கின்றான்.

கணவரின் நண்பர்

யார்தான் சாதரண காலத்தில் கூடத் தம்முடைய கணவரின் நண்பருக்காகக் கழுத்து நகையைக் கழற்றி கொடுக்கச் சம்மதிப்பார்கள்?

கங்கையின் வெள்ளம்

'கள்ளிப் பட்டியனால் என்ன? நாகரிக விலாசமிட்டுத் தொங்கும் கைலாசபுரம் ஆனால் என்ன? கங்கையின் வெள்ளம் போல, காலம் என்ற ஜீவநதி இடைவிடாமல் ஓடிக் கொண்டிருக்கிறது... ஓடிக் கொண்டேயிருக்கும்,

வளைவு என்றால் என்ன?

திருநெல்வேலிப் பக்கத்தில் வளைவு என்பது பத்துப் பதினைந்து வீடுகள் சூழ்ந்த ஒரு வானவெளி, இப்படிப் பல வளைவுகள் சேர்ந்தது தான் ஒரு தெரு, அல்லது ஒரு சந்து. மாவடியா பிள்ளை வளைவு என்றால் அழுக்கு, இடிந்த வீடு, குசேல. வம்சம் என்பவற்றின் உவமானம்.

பருப்பில்லாமல் கலியாணமா?

தமிழ்நாட்டில் மேற்கோள் இல்லாத ஆராய்ச்சிப் புஸ்தகமும் பருப்பில்லாத கலியாணமும் உண்டா?

பலவீனத்தின் மூலம் காசு

பலவீனத்தை வைத்துக் கொண்டு நாலு காசு சம்பாதிக்கப் பிச்சைக்காரனுக்கு முடியும். மனுஷனால் வாழ முடியுமா? அதனால்தான் இந்தச் சுடுகாடு என்ற ரண சிகிச்சை டாக்டர், வாழ்க்கை என்ற நோயாளிக்கு மிக அவசியம்.

எப்படி பிரிந்தார்கள்

நாங்களும் அவிழ்த்து உதறின நெல்லிக்காய் மூட்டை மாதிரிப் பிரிந்தோம்.

ராமாயணத்தில் கலையம்சம்

இலக்கியத்தில் கலையம்சம் என்பது ஜீவத் துடிதுடிப்பில்தான் இருக்கிறது. ராமாயணத்தில் ......... இல்லையா? தற்காலப் புஸ்தகத் தணிக்கை போர்டார், இப்பொழுது எழுதினால் ஆபாசம் என்ற தலைப்பில் தடை விதிக்கக்கூடிய வேறு விவகாரங்கள் இல்லையா? ஒரு பெரிய மாளிகை மாதிரி ராமாயணம் அகண்டாகாரமாக இருப்பதால், அவை பலர் கண்களுக்குத் தென்படுவதில்லை.

இலக்கிய மைல் கல் எது?

ஆனால் இன்று வெளிவரும் புத்தகங்களில் சித்த வைத்தியம், சோதிடம், சிற்றின்பம் பற்றியவை தவிர மற்றவெல்லாம், தம்மை ஒரு இலக்கிய மைல் கல் என மார்தட்டிக் கொண்டு வருகின்றன.

பரங்கிங்காய் குதிரை முட்டை ஆகுமா?

நல்ல இலக்கியமென்றால், எத்தனை நந்திகள் வழிமறித்துப் படுத்துக்கொண்டாலும் இவை உரிய ஸ்தானத்தை அடைந்தே தீரும். பனைமரத்தில் ஊசியைச் சொருகிக் கொண்டு சுமந்து நடந்த பரமார்த்த குருவின் சீடர்கள் போல, எத்தனைபேர் சுமந்து வந்தாலும் பரங்கிக்காய் குதிரை முட்டையாகி விடாது.

நெஞ்சு அழுத்தம் வேணும்

மதிப்புரை எழுதுகிறவனிடம் எதிர்பார்க்க வேண்டியது ஒன்றுதான். நல்ல இலக்கியத்தைக் காணும்பொழுது அதைத் தெரிந்து கொள்ளவும். பரிச்சயம் செய்து வைக்கவும் அவனிடம் திராணி வேண்டும். அப்படியே போலியைக் காணும்போது, யார் வந்து நெற்றிக் கண்ணைத் திறந்தாலும் அது போலி என்று சொல்லுவதந்கு நெஞ்சு அழுத்தம் கொண்டிருக்க வேண்டும்; இது போதும்.

போட்டோவுக்காகச் சிரிப்பு

ஹாஸ்யச் சுவை என்பது இயல்பாக அமைய வேண்டிய விவகாரமாதலால், வலிந்து கட்டிக்கொண்டு சிரிக்க வைக்க முயலுவது போட்டோவுக்காகச் சிரித்த மாதிரியாகத்தான் அமையும்.

அவரைப் போலவே!

ஸ்ரீராமாநுஜலு நாயுடு கதை செல்லுவதில் சமர்த்தர். பாத்திரங்கள் உயிர்த் தன்மையுடன் இயங்குபவை. பெண்களைப் பற்றியும் அவர் கொண்டிருந்த கருத்துக்கள் விபரீதமானவை. கலையைப் பற்றியும் பெண்மையைப் பற்றியும் டால்ஸ்டாய் விசித்திர அபிப்பிராயங்களைத்தான் கொண்டிருந்தார். அதற்காக அவர் சிறந்த கலைஞன் என்பதை நாம் மறந்து விடுகிறோமா? அம் மாதிரியே ராமாநுஜலு நாயுடுவை நாம் பாவிக்க வேண்டும்.

சிறுகதை இலக்கணம்

சிறுகதை என்றால் அளவில் சிறியதாக இருப்பது என்பதல்ல; எடுத்தாளப்படும் சம்பவம் தனி நிகழ்ச்சியாக இருக்க வேண்டும்.

கவிதை எது?

கவிதையைப் போதனைக்குரிய கருவிசாக உபயோகப்படுத்தும் வரை அது கவிதையாக இருக் காது. அதன் ரசனை கெட்டு விடுகிறது.

இசைதான் கவிதையா?

ஒழுக்கமும், தர்மமும், மோட்சமும் கவிஞனது உள்ளத்தில் ஊறி, இருதயத்தின் கனிவாக வெளிப்படும் இசைதான் கவிதையாகும்.



கவிதையை ரசிப்பது எப்படி?

உடற்கூறு நூல் படியாவிட்டால் உயிர் வாழ முடியாதென்று சொல்ல முடியாது. அதைப் போல் இலக்கணம் இல்லாவிட்டால், கவிதை இருக்க முடியாதென்று கூற முடியாது. ஆனால் கவிதையை ரஸிப்பதற்குக் கவிதை என்றால் என்ன வென்று தெரிந்திருக்க வேண்டும்.

பண்டிதர்களின் இலக்கியம்

தற்காலத்தில் பண்டிதர்கள் இலக்கியம் எது என்று கவனிக்க முடியாமல் எல்லாவற்றையும் புகழ்ந்து கொண்டு இடர்ப்படுவதற்குக் காரணம் அவர்கள் இலக்கியம் என்றால் என்னவென்று அறியாததுதான்.

இலக்கியம் எது?

வாழ்க்கையின் அர்த்தத்தைச் சொல்லுவது தத்துவம், வாழ்க்கையைக் சொல்வது, அதன் ரசனையைச் சொல்வது இலக்கியம்.

இலக்கியம் குப்பையா?

இலக்கியத்திற்கு ஜீவநாடி அமைப்பு. அதை இழந்தால் இலக்கியம் வெறும் குப்பை.

வாழ்க்கையின் சாளரம்

சிறுகதை, வாழ்க்கையின் சாளரங்கள். வாழ்க்கையின் ஒரு பகுதியை அல்லது ஒருவரின் தனி உணர்ச்சியை அல்லது ஒரு குண சம்பவத்தை எடுத்துச் சித்திரிப்பது.

இலக்கியத்தின் ஜீவநாடி

பொதுப்பட நோக்கின் இலக்கியத்தின் ஜீவ நாடி உணர்ச்சியும் சிருஷ்டி சக்தியும். இந்த இரண்டும் இல்லாவிட்டால் அது வெறும் குப்பை

கலையின் இலட்சியம் எது?

கலை, தர்ம சாஸ்திரம் கற்பிக்க வரவில்லை; ஒழுக்க நூலை இயற்ற வரவில்லை. உடற்கூறு நூலை எடுத்துக் காட்ட வரவில்லை. பத்துத் தலை ராவணனும், ஆறுதலை சுப்ரமணியனும், உடற்கூறு நூலுக்குப் புறம்பான அபத்தமாக இருக்கலாம். ஆனால் ஒரு கொள்கையை இலட்சியத்தை உணர்த்தக்கூடியது, அது தான் கலையின் இலட்சியம்.

எது கவியாகும்

கவிதை என்றால் என்ன? யாப்பிலக்கண விதிகளைக் கவனித்து வார்த்தைகளைக் கோர்த்து அமைத்து விட்டால் கவியாகுமா?

வாழ்க்கைப் பாதை

வாழ்க்கைப் பாதையில் கணவனும், மனைவியுமாகச் செல்லுகையில், மஞ்சள் பூப் போல் இருந்த சமூகம், பந்துக்கள் அவன் பிரிந்தவுடன், முட்களாகக் குத்துகிறார்கள்.

உணர்ச்சிக் கண்கள்

கவிஞன் உலகத்தின் உண்மைகளை, வாழ்க்கையின் ரகஸியங்களை வேறு விதமாகப் பார்க்கிறான். அவன் கண்கள் உணர்ச்சிக் கண்கள். கனவுக் கண்கள்.

சரியான வார்த்தை எது?

கவிதையில், சரியான வார்த்தைகள், சரியான இடத்தில் அடைய வேண்டும். கவிஞன் வார்த்தைகளை எடுத்து கோர்ப்பதில்லை. உணர்ச்சியின் பெருக்கு, சரியான வார்த்தைகளைச் சரியான இடத்தில் கொண்டு கொட்டுகிறது.

கவிராயன் யார்?

கத்தி விழுங்குபவனும் கவிராயனும் ஒன்றல்ல. கவிராயன் நாம் செய்யக் கூடிய காரியத்தைத்தான், நாம் எப்படிச் செய்ய விரும்புகிறோமோ அந்த அளவு ஆணித்தரமான அழுத்தத்துடன் செய்கிறான் என்பவை தவிர நாம் செய்ய முடியாத காரியத்தை அவன் செய்கிறான் என்பதல்ல.

நடைவண்டி

நமது இலக்கியமானது நெடு நாள் பட்ட வளர்ச்சி கண்டது. அதன் வார்த்தை அமைதிகளே கவிதைப் பண்பு கொண்டு, நடைபயிலும் சிறு குழந்தைக்கு நடைவண்டி போல அமைந்து கிடப்பதால், பேரிகை கொட்டி பிழைப்பதைவிட, கவிதை கட்டிப் பிழைப்பது இலகுவான காரியமாகி விட்டது.

கவர்ச்சி காணலாமா?

இயல்புக்கு விரோதமான எந்தச் செயலிலும் கவர்ச்சி காண முடிவது துர்லாபம்.

இரண்டு இருதயங்கள்

ஒரே விதமாகத் துடிக்கும் இரண்டு இருதயங்கள் பிணிக்கப்படுவதில் அதிசயமில்லை.

அன்பில் வசப்படலாமா?

குயிலுக்கு அவன் அடிமை. அன்பில் வசப்படாமல் யார்தான் இருக்க முடியும்? ஆதிலும் ஒரு கவிஞன்...

பகற் கனவுகள்

மோகனமான பகற் கனவுகள் காண்பதில் கவிஞனுக்கு இணையாகக் காதலர்களைத்தான் ஒருவாறு கூறலாம்.

கை தட்டலாமா?

இரண்டு கைதட்டினால் தானே சப்தம் இரண்டு மனம் போராடினால் தானே இறுதி.

இலட்சிய உலகில் வசிப்பவனா?

கவிஞன் எப்பொழுதும் ஒரு இலட்சிய உலகில் வசிப்பவன். அவனது உள் மனத்தின் உணர்ச்சி ஊற்றுக்களிலிருந்து ஜீவசக்தி பெற்று வரும் வார்த்தைகள் தாம் கவிதைகள்.

எதற்கு புஸ்தகம்?

தெரிந்ததைச் சொல்லுவதற்குப் புஸ்தகமா, தெரியாததை அறிவதற்குப் புஸ்தகமா? இரண்டிற்கும்தான்.

தனிமனிதன் வாழ முடியாதா?

தனிமனிதன் உயிருடன் வாழ முடியாது; அதாவது தனியாக இருந்தால் மனிதனால் வாழ முடியாது என்பது மனிதப் பிராணிகள் கஷ்டப்பட்டு அறிந்த உண்மை.

கடவுள் என்ற பிரமை

கடவுள் இருந்தால் என்ன? இல்லாவிட்டால் என்ன? ஒரு கூட்டத்தின் பாதுகாப்பிற்கு அது அவசியமானால் ஒரு பொய்யைச் சொல்லித்தான், கடவுள் என்ற பிரமையைச் சிருஷ்டித்தால் என்ன?

நாஸ்திகம் நிஜமா?

இந்தக் கடவுள் விஷயம் ரொம்ப ஸ்வாராஸ்யமானது. அது தனிமனிதனுக்கு ஒரு தைரியத்தைக் கொடுக்கிறது. சமூகத்திற்கு ஒரு சக்தியைக் கொடுப்பது போல், நாஸ்திகம் தர்க்கத்தில் நிஜமகே இருக்கலாம். அது சுவாரஸ்யமற்றது. வாழ்க்கையில் ஒரு பிடிப்பை ஏற்படுத்த முடியாதது.

மோட்சத்தைக் கொடுப்பது எது?

வாழ்க்கையில் ஒரு வெறி ஏற்பட்டால்தான் பிடிப்புடன் முன்னேறி வாழமுடியும் அதைச் சமயம் கொடுக்கிறது. அது சொல்லுகிற மோஷத்தைக் கொடுக்காவிட்டாலும் இது போதும். அந்த மோஷத்தை விட மேலானது.

சுட்டு வச்ச தோசை

அவள் கண்ட நிலா வெண்ணிற நரை. நிறை வெள்ளமென பரந்து கிடக்கவில்லை. ஆனால் சோளப்பொறி மத்தியிலே சுட்டு வச்ச தோசையைப் போலத் தானிருந்தது.

சாப்பாட்டுக் கடை?

சாப்பாடு உயிர் வாழ்வதற்கு அவசியந்தான். ஆனால் வாழ்க்கை வேறு; உயிர் வாழ்தல் வேறு. வாழ்க்கை ஓர் அநுபவம். சிலர் உலகம் முழுவதையுமே சாப்பாட்டு கடையாக மதித்து விடுகிறார்கள்.

சரித்திரமா? புளுகா?

அச்சடித்த புஸ்தகங்களைப் போல் இவர்களுடைய சரித்திரங்களும் கொஞ்சம் அமிதமான புளுகுகள் நிறைந்திருக்கும்.

தர்மம் வெற்றி பெறுமா?

தர்மம் இலக்கியத்தில் மட்டும் வெற்றி பெற்றுக் கொண்டிருப்பதால் வாழ்வு அப்படியேயாகி விடுமோ?

சட்டம்போட்டு மாட்டப்பட்ட படமா?

வாழ்வின் ரகசியம் இதுதான். மகா இலக்கியங்கள், பலவித கோணங்களிலிருந்தும் வாழ்வை நோக்குவதைத் தடை செய்வதற்காகச் சட்டம் போட்டு மாட்டப்பட்ட படங்கள் அல்ல.

நிதிகள் திரட்டாதீர்

இத்தனைக்கும் மேலே

இனி ஒன்று ஐயா, நான்

செத்ததற்குப் பின்னால்

நிதிகள் திரட்டாதீர்!

நினைவை விளம்புகட்டி,

கல்லில் வடித்து

வையாதீர்.

எந்தத் தொழில்?

யோக்கியமாய்

வாழ இங்கே

எந்தத் தொழில்

உண்டு?

ஊருணி கதை

ஊருணிக் கதை யெல்லாம்

ஊரறிந்த ரகசியம் காண்!

கண்ணடித்த பயன்!

கையடித்துக் கொடுத்தால்

காலேஜு வாசலிலே

கண்ணடித்த பயனடைவேன்!

எல்லை தெரியாதோ!

தொல்லை வராமல்

நாம் தொட்டுப் பழகிடுவோம்,

எல்லை தெரியாதோ நமக்கெல்லாம்?

இன்னமுமா பாட்டு?

பண் என்பார் பாவம் என்பார்

பண்பு மரபென்றிடுவார்

கண்ணைச் சொருகிக்

கவி என்பார்-அண்ணாந்து

கொட்டாவி விட்ட தெல்லாம்

கூறு தமிழப் பாட்டாச்சே

முட்டாளே இன்னமுமா பாட்டு?

பசியா வரம்

பசியா வரம் அருள்வாய் அல்லால்

நசியா நலம் அருள்வாய் முருகா

பால்காரனின் பால்

புனிதமாக ஏதாவது ஒன்று இருக்கிறதா? இந்தப் பால்காரன் விற்கிற பாலுக்கும், உலகத்தின் நன்மைக்கும் வித்தியாசமில்லை நாமாக நினைத்துக் கொண்டால் நன்மைதான்.

சென்னையில் வசிப்பது

சென்னையில் வசிப்பதால், ராஜீயக் கைதி சிறையில் அனுபவிக்கும் சிரமத்தையெல்லாம் தியாகம் செய்யாமல் அனுபவித்துவிடலாம்.

மன இருள்

இருளில் வழிதெரியாது தவிக்கும் பாதசாரி, ஏதாவது ஒன்றைத் தனது நம்பிக்கைக்குப் பாத்திரமானது என்று சங்கற்பித்துக் கொண்டு, அதை நோக்கிச் செல்வதுபோல், தன் கணவர் நித்தியம் பூஜை செய்யும் கோவிலுக்குச் சென்று, கலங்கிய உள்ளத்திற்கு சாந்தியை நாடினாள். கோயில் மூலஸ்தானத்தின் இருளுக்கு இவளது மன இருள் தோற்றுவிட்டதாகத் தெரியவில்லை.

உலகத்தின் நிஷ்டூரம்

ஏழ்மை நிலைமையிலிருக்கும் பெண்கள் கொஞ்ச காலமாவது கன்னியாக இருந்து காலந்தள்ள ஹிந்து சமூகம் இடந்தராது. இவ்விஷயத்தில் கைம்பெண்களின் நிலைமையைவிட கன்னியர்களின் நிலை பரிதாபகரமானது. மிஞ்சினால் விதவையை அவமதிப்பார்கள். ஆனால் ஒரு கன்னிகையோ வெனின், அவதூறு, உலகத்தில் நிஷ்டூரம் என்ற சிலுவையில் அறையப்படுவாள். பணக்காரர்களான பூலோகத் தெய்வங்கள் மீது சமுதாயக் கட்டுப்பாட்டின் ஜம்பம் பலிக்காது.

சுத்த சைவன்

“இது தான் உம்முடைய குழந்தையோ?” என்று கேட்டார் கடவுள். குழந்தையின் பேரில் விழுந்த கண்களை மாற்ற முடியவில்லை ஆவருக்கு. கந்தசாமிப் பிள்ளை சற்றுத் தயங்கினார்.

“சும்மா சொல்லும்; இப்போவெல்லாம் நாம் சுத்த சைவன், மண்பானைச் சமையல் தான் பிடிக்கும். பால், தயிர் கூடச் சேர்த்துக் கொள்வதில்லை” என்று சிரித்தார் கடவுள்.

சிரங்கு உபாதை

மெலிந்த தேகி; இடுப்பைச் சுற்றிலும் முதுகு வரையிலும் வண்ணான் சொறி, இவருடைய அன்புக்குக் கிருஷ்ண பக்தியும் சிரங்கு உபாதையும் போட்டியிடுகின்றன.

வாழ்க்கை எதனால் நடக்கிறது?

ஆசை! அதற்கும் மனிதன் சொல்லிக் கொள்ளும் லட்சியம் என்பதற்கும் வெட்கமே கிடையாது. இலட்சியத்தால் நடக்கிறதாம், நீதியால் நடக்கிறதாம்; தர்மத்தால், காதலால் வாழ்க்கை நடக்கிறதாம்! உண்மையில் இதில் ஏதாவது அர்த்தமிருக்கிறதா? வாழ்க்கையில் ஒன்று. தான் நிஜமானது. அர்த்தமுள்ளது. அது தான் மரணம்.

நான் அவளையே பார்த்துக் கொண்டு பின்புறம் கை நீட்டும் பொழுது சிலசயம் என் கை அவள் கை வளையலில் படும்? அல்லது. ஸ்தன்யங்களில் பட்டுவிடும்.

அயோக்கியர்களின் நடமாட்டம்

அயோக்கியர்கள் நடமாடுகிறார்கள்: தெய்வ சன்னிதானத்திலும் நடமாடுகிறார்கள். அங்கே வியாபாரத்தனமாக மனசை அடமானம் வைக்கிறார்கள்.

அரிச்சந்திரனின் தடி

அரிச்சந்திரன் மயான காண்டத்தில் ஊன்றிக் கொண்டு நிற்கவேண்டிய தடி சடக்கென்று ஒடிந்து விட்டால் எப்படியிருக்கும்? ‘பின்-அரிச்சந்திரன்’ அந்த சமயத்தில் சோகமே குலைய மிருதங்ககாரனைப் பார்த்து உறுமுவது போலிருந்தது என் நண்பரின் பார்வை.

கால்களை நம்பலாமா?

ஜனங்கள் பார்த்தசாரதியை நம்பினார்கள். பக்கத்து வட்டாரக் கடவுள்களை நம்பினார்கள். கடைசியில் இப்பொழுது தங்கள் கால்களையே நம்ப ஆரம்பித்து விட்டார்கள்.

மனம் நொந்து கொள்ளலாமா?

வாதவூரே, அப்படி மனம் நொந்து கொள்ளக் கூடாது. தாங்கள் பழையபடி எனக்கு அமைச்சராகவே இருக்க வேண்டும். தாங்கள் இல்லாவிட்டால் இத்தனை குதிரைகள் கிடைக்குமா?

திருட்டுக் கூட்டமா?

இந்த எழுதுகிற பயல்கள் எல்லோரும், திருட்டுக் கூட்டம், சொன்னாச் சொன்னபடி நடக்கமாட்டான்கள்; பொஸ்தகக் கடை வைக்கிறதை விடப் பொடலங்காய் விக்கலாம்.

முயல் எப்படி இருக்கும்?

இந்தக் கறுப்புக் குட்டி ...... நாய்; அதிலும் பட்டணத்து ...... நாய். அதற்கு முயல் என்றால் எப்படி இருக்கும் என்று கூடத் தெரியாது. மேலும் அது எழுத்தாளர் அல்ல; சொந்த மனசினாலோ, இரவல் விவகாரத்தினாலோ கற்பனை பண்ணிக் கொள்வதற்கு அதற்குச் சக்தி இல்லை.

புளுகுவதுதான் கதையா?

சிறு கதை பற்றி : ‘பயன் கருதாது, தன்மயமாகி லயித்து ஒட்டிப் புளுகுவதுதான் கதை’

சிறிய சாளரம்

‘சிறு கதை வாழ்க்கையின் சிறிய சாளரம்’

வாழ்வுக்குப் பொருள் கொடுப்பது எது?

வாழ்வுக்குப் பொருள் கொடுப்பதுதான் கலை சிறுகதை வாழ்வின் பல சூட்சுமங்களையும் எழுத்தில் நிர்மானித்துக் காண்பித்தது. சிறுகதைகள் வாழ்வை, உண்மையை நேர் நின்று நோக்க ஆரம்பித்தன.

வெள்ளி முளைத்தாற் போல்

தமிழிற்கே விமோசனம் கிடையாது என்று தினைத்துக் கொண்டிருக்கும் சமயத்தில் வெள்ளி முளைத்தாற்போல் சிறுகதை எழுதுகிறவர்கள் தோன்றி இருக்கிறார்கள். அவர்களுடைய எழுத்துக்கள், கற்பனைகள் எல்லாம் தமிழுக்குப் புதியவை.

குருடனின் நிலை!

இருள்! இருள்! பற்றுக் கோலை யாரோ தட்டிப் பிடுங்கிக் கொண்ட குருடனின் நிலை.

இயற்கையின் செழிப்பு

காலத் தேவனின் தங்கைகள் போன்ற பாறை இயற்கையின் செழிப்பான கானகம் என்ற அந்தப் புரத்திலே மறைந்து கிடந்தன.

மனோ தர்மம்

சிறு கதையின் ரூபம் கதை எழுதுபவனின் மனோதர்மத்தைப் பொறுத்தது.

காலம் ஓடுமா?

நான் ஓடினால், காலம் ஒடும் நான் அற்றால், காலம் அற்றுப் போகும்.

புதுமைப்பித்தன் எழுதிய கடிதம்

* * *

பலர் கடிதம் எழுதுகிறார்கள். நீண்ட கடிதங்களே எழுதுகிறார்கள். ஆனால் சிலருடைய கடிதங்கள்தாம் இலக்கியமாக அமைகின்றன. அத்தகைய அருமையான கடிதம் இது; கவிதை என்றால் ‘ஆஹா’ என்று கூச்சலிடுவது மட்டுத் தான் என்ற அபிப்பிராயம் பலரிடையே இருந்து வருகிறது. இலக்கியத்தில், முக்கியமாக, கவிதையில் அமைதியும் உருவமும் அற்புதமான அம்சமாகும். இளவேனில் என்னும் கவிதை நூலைக் குறித்து ‘சொ. வி.’ எழுதிய இக்கடிதத்தை மகிழ்ச்சியுடன் பிரசுரிக்கிறோம்.

170. ராயப்பேட்டை ஹைரோடு, ராயப்பேட்டை

3–7–46

அருமைச் சோமையாவுக்கு,

இன்று மத்தியானந்தான் இளவேனில் பருவத்தைக்கூட பார்ஸல் செய்யக்கூடிய கெட்டிக்காரர்கள் திருச்சியில் உண்டு என்பதை அறிந்தேன். Surprise Packet கிடைத்ததும், மத்யானம் முழுவதும் ஸினிமாத் தொழிலுக்கு கல்தா கொடுத்து விட்டு, உட்கார்ந்து விட்டேன். ‘வீசுதென்றலும் வீங்கின வேனிலும்’ என்ற வரியை நினைப்பூட்டும் படியான தலைப்பு. அந்தப் பாட்டின் இனப் பிரிவுகளின் விரிவான காட்சிகள் இந்தச் சிறு கனவுக் குவியல் என்று முதல் வாசிப்பில் பட்டது. ‘என்ன ஸோமு ஸார், பாட்டு நேர்த்தியாக இருக்கே’ என்ற ரகமான அபிப்பிராயம் உன்னை insult செய்வதற்கு ஒரு வழி. அந்த வழியை விட்டு ருத்திரசன்மனாக உட்கார்ந்து கொண்டு பார்ப்போம் என்றால்......

வண்ண மதுக்கிண்ணம்

வார்த்த கவிதையெலாம்

எண்ணக் குகையினிலே

எதிரொலித்து விம்முதடா

என்றுதான் சொல்ல வேண்டும். வசனத்தில் அமையவில்லை.

முடியாதது என நான் நினைத்திருந்த ஒரு கலவை அது. பொதியை, மதுக்கிண்ணம் சிக்கந்தர், சின்னக் குயிலி, மாரணம், மன்மதன், எத்தனை எத்தனை படங்கள்.

“In Xanadu did Kublaikhan.” என்று தொடங்கும் அடிகளை நினைத்துப் பார்.

Caverns measureless to Meri.........

Where Damsel with a dulcimer.........

எண்ணிக் கனவுகளை வாரிச் சொரியும் பாட்டுக் குவியல் இது.

பாட்டுக்கள் முச்சூடும் ஒரே அமைதியில் மனசின் ஆழத்தில் உள்ள ஏக்கத்தின் எதிரொலியாக அமைந்திருப்பது, நினைவின் கோடியிலே மறைந்தும் மறையாது நின்றிருக்கும் துயரத்தின் பிரதிப்பலிப்பாகத் தென்படுகிறது. உனக்கு இந்த மாதிரி ஏக்கம் வரக் காரணம் என்ன? வெறும் Artists Pose என்று சொல்லுவார்களே அதுவா என யோசித்தேன். அதுவல்ல; சூழ நிற்கும் வரட்டுத் தவளைக் கவிதைகள் மனசை நிலைதடுமாறச் செய்வது இயல்பு தானே.

இது நன்றாக இருக்கிறது என ஒன்றை மட்டிலும் சுட்டிக் காட்ட எனக்குத் தெரியவில்லை. பொருளைக் கரைக்கும் பொதியைக்கும் இழுத்துச் செல்லும் இந்தப் பாட்டுகள், கவிதையிலே ஒரு புதிய துறையை இயற்றுகின்றன. இதுவரை சரிவர புரிந்து கொள்ளாமல் பாரதியின் எதிரொலிச்சான் கோவில்களாக, அல்லது Frustration Complex ஐ பரிபூரணமாக கசப்புக்குன்றாமல் சொல்லக் கூடி திறனில்லாத ‘கவிஞர்’ கூட்டங்கள், யாப்பு என்ற வாணலி (இருப்புச் சட்டியில்} வார்த்தைகளைப் போட்டு வறுத்து கருக்கி எடுத்து வைப்பதைத்தான் பார்த்திருக்கிறேன். ஒரு Personality ஐ Reveal செய்யும் பாட்டுகள் கோவையாக ஒரு புதிய துறையை இலக்கியத்தில் ஏற்படுத்துகிறது என்றால் அது நம் அதிர்ஷ்டந்தான். தமிழ் வழக்கொழிந்த மொழியாகிவிடுமோ என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுத விரும்பிய எனக்குக் கொடி துளிர்க்கிறது என்பதைக் காண உற்சாகமிருக்கத்தானே செய்யும். அதற்காக மன்னிப்பு,

நிற்க, கைலங்கிரியில் நடந்த கதையை என்ன அழகாக ஜோடித்து விட்டாய். சிதம்பரச் செய்யும் கோவையிலே பிரபஞ்ச உற்பவமும் ஒடுக்கமும், ஈசன்-பார்வதி விளையாட்டாக, அம்மை சிற்றில் கட்டுவதும் ஈசன் அழிப்பதுமாக ஒரு கற்பனை, அது ஒரே பாட்டு. ஆனால் இங்கோ நிஜமான அநாயசமான விளையாட்டு. குழந்தைகள் விளையாட்டல்ல. காதல் விளையாட்டு, கண்ணைப் பொத்தவும் காரிருள் படர்ந்த கதை பயமாக பிறகு விளையாட்டாக அமைந்திருப்பது நயமாக இருக்கிறது.

இந்தப் பாட்டுகள் எல்லாவற்றிலும் அமைந்த ஏக்கமும் அழகும் ஒரு விசித்திரமான கலவை. தமிழுக்குப் புதிது. எந்த விதத்தில் என்றால், அழகோடு ஆனந்தம் வரும். இருளோடு துயரத்தின் சாகை வரும்; தனித்தனியாக அமைவதை விட்டு, இரண்டும் தாமரை இலையில் உருளும் தண்ணீர் போல அழகை வாரி வீசுகிறது.

இப்படிக்கு உனது,

சா. வி.